வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

மனிதர்கள்

பாலமாய் சில பேர்கள்
பாதையாய் சில பேர்கள்
பாடமாய் சில பேர்கள்
பாரமாய் சில பேர்கள்

சுகமாய் சில பேர்கள்
சுமையாய் சில பேர்கள்
சுடராய் சில பேர்கள்

வீணாய் சில பேர்கள்
விதையாய் சில பேர்கள்
வேராய் சில பேர்கள்
விழுதாய் சில பேர்கள்

அனலாய் சில பேர்கள்
அர்த்தமுடன் சில பேர்கள்
அடங்காமல் சில பேர்கள்

இனிப்பாக சில பேர்கள்
இழிவாக சில பேர்கள்
இல்லாமல் சில பேர்கள்
இயலாமல் சில பேர்கள்

வளமாக சில பேர்கள்
வறட்சியிலே சில பேர்கள்
வாழ்வதற்கு சில பேர்கள்
வாடவென்றே சில பேர்கள்

மழையாய் சில பேர்கள்
மரமாய் சில பேர்கள்
மண்ணாய் சில பேர்கள்

ஏணியாய் சில பேர்கள்
ஏக்கத்தில் சில பேர்கள்

கனலாய் சில பேர்கள்
கரும்பாய் சில பேர்கள்


                                           சரித்திரமாய் சில பேர்கள்
   சத்தியமாய் சில பேர்கள்



எத்தனை விதமாய்  மனிதர்கள் ...........
இவற்றில் நிங்கள் ?

வியாழன், 25 பிப்ரவரி, 2010

குழந்தையின் - மன பயங்கள்



குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்தாலோ அல்லது அழுகையை நிறுத்துவதற்கோ, பயமுறுத்தி அவர்களின் அழுகையை நிறுத்த முயலாதீர்கள். குழந்தைகளுக்கு அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. இதனால் அதற்கு உயிருள்ளது என்று அறிந்துகொள்கிறோம். அதன்பிறகு வரும் அழுகையினால் பசி, வலி போன்ற உணர்வுகளை தாய் புரிந்து கொள்கிறார். சிலர் குழந்தைகளை கிள்ளி, அடித்து அதன் உடலுறுப்புகளை இம்சித்து அழ விட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள். இப்படிப்பட்டவர்களை குழந்தையின் அருகில் விடவ கூடாது.

இன்னும் சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப்போட்டு விளையாடுதல், ஆலவட்டம் சுற்றி விளையாடுதல் என்று விபரீதமாக கொஞ்சுவார்கள். இவைகளை குழந்தைகள் ரசிப்பதாக நினைத்துக் கொண்டு பலமுறை விளையாடும் போது குழந்தைகள் மனதில் இனம் புரியாத பய உணர்வு ஏற்பட்டு திடீரென அழத் துவங்கி விடும்.

சாப்பிட மறுக்கும் குழந்தைகளை நாய் கடிக்கும், பூனை கடிக்கும், மாடு முட்டும் எனச் சொல்லி பயம் காட்டி சாப்பிட வைக்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை முடக்கி விடும் முட்புதர்கள் ஆவார்கள். இப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைப்பருவ மன பயங்கள், ஒருவரது ஆளுமையையே முடக்கி விடுகிறது என்பது உளவியல் உண்மையாகும்.

இருட்டறையில் பூட்டப்பட்டு துன்புறுத்தப்படும் குழந்தைகள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள். பய உணர்வுடன் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். பயங்காட்டி உணவு உண்ண வைக்கப்படும்குழந்தைகள் உணவையே வெறுத்து வளர்கின்றன. அடிபட்டு, துன்புறுத்தப் பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர், உறவினர்களை வெறுத்து வளர்கின்றனர். குற்ற உணர்வுடனேயே வளர்ந்து, பெரியவர்களானதும், மனித உறவுகளை வெறுத்து, பிளவுபட்ட மனங்களுடன் மனநோயாளிகளாகி விடுகின்றனர்.

குழந்தைகளை இயல்பாக வளரவிட வேண்டும். அதிகமான பயம் காட்டி வளர்த்தால் தன்னம்பிக்கை இழப்பு, வெறுப்பு உணர்வு, பிளவுபட்ட ஆளுமைக் கூறுகள், குறைபட்ட பழகும் பாங்கு என பல்வேறு அவலங்களுக்கு ஆளாகின்றனர்.

அன்புடன், பாசத்துடன், அரவணைப்புடன், தன்னம்பிக்கை வளரும் விதமாக குழந்தைகளை வளர்த்துங்கள். மன பயத்துடனே வளரும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் இயல்பாக நண்பர்கள் குழுவில் கலந்து கொள்ளாமல் தனித்து அல்லது விலகியே இருப்பார்கள். விளையாட்டு, வீர தீரச்செயல்களில் ஈடுபட தயங்குவார்கள். வாலிபப் பருவத்தில் ஊக்கப் படுத்தினாலும் பய உணர்வு காரணமாக பின்தங்கியே இருப்பார்கள். கல்வியில் முன்னிலை வகித்த மாணவர்கள்கூட பய உணர்வால் தன்னம்பிக்கை இழந்து பின் தங்கி விடுகின்றனர். இவர்களுடைய ஆளுமையும் சிதைந்து விடுகிறது. ஆகவே, பிள்ளைப் பருவத்திலேயே பயமின்றி வாழ குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

அச்சம்தவிர் என்ற சொல்லுக்கேற்ப, தைரியமாக வளர குழந்தைகளுக்கு பெற்றோர் ஆதரவளிக்க வேண்டும். "செய்யாதே" என தடை செய்வதே பயத்தின் முதல்படி. ஆனால் "ஜாக்கிரதையாக இதைச் செய்" என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும். ஆகவே குழந்தைகளை பய உணர்வு காட்டி வளர்க்காதீர்கள். குழந்தைகளுக்கு நல்ல நடத்தைப் பண்புகளை பக்குவமாக கற்றுத் தந்து, நல்ல சந்ததியை உருவாக்குங்கள்.





திங்கள், 22 பிப்ரவரி, 2010

வேண்டும்......

இடி விழுந்தாலும்
இடியாத
மனம் வேண்டும்.

எதிரியையும்
நேசிக்கும்
இதயம் வேண்டும்.

நல்லதே
நடக்குமென்ற
நம்பிக்கை வேண்டும்.

நினைத்ததை
நடத்தியே
தீர்வதென்ற
உறுதி வேண்டும்.

எல்லாம்
எனக்கென்ற
எண்ணம் நீங்கி
'எல்லார்க்கும்
எல்லாமும்'
எனும் எண்ணம்
வேண்டும்.

'முடியாது'
என்ற சொல்
வேண்டும்.

சிந்தனை கூராக
வேண்டும்.

பார்வை நேராக
வேண்டும்.

அன்பானவர்களூடன்
அமைதியான வாழ்வு
வேண்டும்.

நன்றி மறவாமல்
வேண்டும்.

இழந்தவற்றை (..பல..)
மிண்டும் பெற
வேண்டும்..

இவற்றை விட
நண்பர்களே நிங்கள் மட்டும்
எண்றென்றும் வேண்டும்...?...
 
இறைவா வரம்
தர வேண்டும்.
 

வியாழன், 18 பிப்ரவரி, 2010

கங்கை கொண்ட சோழபுரம் - வரலாறு


முதலாம் இராசேந்திர சோழன் அலைகடல் நடுவில், மரக்கலம் பலசெலுத்திப் பெற்ற கங்கை வெற்றியினைச் சிறப்பிக்கும் வகையில் கட்டப்பட்டது இக்கோயில். சிதம்பரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் தென்மேற்காகவும், கும்பகோணத்தில் இருந்து வடக்கே 30 கி.மீ தொலைவிலும், அரியலூரிலிருந்து மேற்கே 30 கி.மீ தொலைவிலும் அணைக்கரையில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் உள்ளது.


ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முதலாம் இராசேந்திர சோழனின் தலைநகரம். கங்கை, இலங்கை, கடாரம், ஜாவா, போர்னியா, சுமத்திரா அந்தமான்- நிகோபார் எனப்பரந்து விரிந்த சோழப்பேரரசின் இதயம், இப்பகுதி. முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பிறகு, குலோத்துங்கன், விக்கிரமசோழன், இராசாதிராசன் ஆகிய மன்னர்களின் தலைநகரம்.


தஞ்சைப் பெரியகோயிலை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சைக் கோயிலைவிட சற்று உயரம் குறைந்தது. ஆயினும், கட்டடக் கலை நுணுக்கத்தில் மிகச் சிறந்தது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய விமானத்திற்குப் பிறகு, கங்கை கொண்ட சோழீச்சுவரர் விமானமே தமிழ்நாட்டில் உள்ள விமானங்களில் உயர்ந்து நிற்பதாகும்.

பெரும் கலைப்படைப்பை நமக்குத் தந்த மாமன்னன் குறித்த தகவல்களை இப்பதிவில் நன்றியோடு தெரிவிக்கிறேன். ஆலயம் குறித்த இதரத் தகவல்கள்.



முதலாம் இராசேந்திர சோழன்.
இயற்பெயர் மதுராந்தகன். சோழப்பேரரசன் இராசராச சோழனுக்கும், திரிபுவன மாதேவி என வழங்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 - 1044. ஆட்சி புரிந்த 32 ஆண்டுகளில் பெற்ற வெற்றிகள் எண்ணற்றவை. கி.பி. 1024 முதல் கி.பி. 1025 வரை கடல்கடந்து பர்மா, கடாரம் ஆகிய நாடுகளை வென்றான். " கடாரம்கொண்டான்" என்ற விருதுப் பெயரும் பெற்றான்.


இந்தியாவின் வடக்கே கங்கை நதிவரை இராசேந்திரன் வெற்றிக்கொடி பறந்தது. புலவர்கள் " கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் " என்று சிறப்பித்துப் பாடினர். மன்னனது வடநாட்டு வெற்றிக்கு வாளாகவும், கேடயமாகவும் விளங்கிய நம் வீரர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு நகரையே நிர்மாணித்து, மாபெரும் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயிலைத் தோற்றுவித்து அழியாப் புகழ் கொண்டான். இராசேந்திர சோழன் மட்டுமல்லாது, அவனது மனைவியரும் இக்கோயிலுக்கு செப்புத் திருமேனிகளும், நிவந்தங்களும் அளித்துள்ளனர்.

கி.பி 1023 ல் வடநாட்டில் போர் தொடுத்து மண்ணைக்கடக்கம், கோசலநாடு, உத்தரலாடம், தக்கணலாடம், வங்காளம் முதலிய நாடுகளை வென்று, அந்நாட்டு அரசர்களின் தலைமீது கங்கை நீரைக் கொண்டு வரும்படிச் செய்தான். கங்கை நீர் தெளித்து நிர்மாணிக்கப்பட்ட கோயிலும், சுற்றுப்புறங்களும், மன்னனின் வெற்றியை இன்றும் பறைசாற்றுகின்றன.பாரிஜாத மலரில் ரீங்காரமிடும் தேனீயைப் போல சிவனுடைய தாமரைப் பாதத்தை நேசிப்பவனாக மதுராந்தகன் (இராசேந்திரன்) விளங்கினான் என்ற செய்தியை ஏசாலம் செப்பேடு கூறுகிறது. இது, செப்பேட்டின் வடமொழிப் பகுதியில் உள்ள செய்தியாகும்.

இதரப் பெயர்கள்: அதிசய சோழன், இரட்டபாடி கொண்ட சோழன், சோழேந்திர சிம்மன், பராக்கிரம சோழன், தான விநோதன், நிருபதிவாகரன், மனுகுலச்சோழன், மகிபாலக் குலகாலன், பண்டிதசோழன்.

இம்மன்னன் காலத்து குருமார்களாக சர்வசிவ பண்டிதர், ஈசானசிவ பண்டிதர், இலகுளீச பண்டிதர், நம்பியாண்டார் நம்பி, கருவூலத் தேவர், சதுரானன பண்டிதர் ஆகியோர் விளங்கினர். தனது குருவான சதுரானன பண்டிதர் விருப்பத்தின் பேரில் திருவொற்றியூர் கோயில் விமானத்தை, வீரசோழதச்சன் என்ற சிற்பியைக் கொண்டு அமைத்ததைக் கல்வெட்டு கூறுகிறது.

இமயத்தில், புலிச்சின்னம் பொறித்திட்ட மாமன்னன் கரிகாலச் சோழன் பரம்பரையில் வந்த இராசேந்திரன், எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மன்னன் விரும்பியது கங்கை வெற்றியைத்தான். எனவே, " பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன்" என சிறப்பிக்கப் பெற்றான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயில், கல் காவியமாக, சிற்பக் களஞ்சியமாக, செப்புக்கலையின் கூடமாக, ஆன்மீக அமைதியின் இருப்பிடமாக, மாமன்னன் இராசேந்திரனின் போர்த்திறனையும், பேராற்றலையும் உலகோர்க்கு அறிவிக்கும் நிலைக்களனாகச் சோழ மண்ணில் திகழ்கிறது.

ஆலய படங்கள்:






புதன், 17 பிப்ரவரி, 2010

எனது மகனின் நிழற்படங்கள்










செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தமிழர் வாழ்க்கையில் - ஆடை அணிகலன்கள்

இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.

நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ரிதியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

மெட்டி:


திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப் பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும். [பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]

ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை

நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.


பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி

அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.



கொலுசு:



கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.
பொதுவாக, உடல் ரிதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு. உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. [சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும்

என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]



அரைநாண் கொடி[அரணாக்கொடி]:


அரைநாண் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.

மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்க்கொடி உடல்
பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.



இதர விசயங்கள்:



மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,

பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.
அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.


சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.

இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.





தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):-



1. தலையணி:

தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.



2. காதணி:

தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,

கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.



3. கழுத்தணிகள்:

கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,

நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.



4. புய அணிகலன்கள்:

கொந்திக்காய்.



5. கை அணிகலன்:

காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.



6. கைவிரல் அணிகலன்கள்:

சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.



7. கால் அணிகலன்கள்:

மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.



8. கால்விரல் அணிகள்:

கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.



9. ஆண்களின் அணிகலன்கள்:

வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,

பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,

கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,

முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.



(குறிப்பு உதவி)..நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன், எழில்நிலா)

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ரேடியோ திரட்டி

இது செம தூளு


ரேடியோ அனேகமாக 30 வயதுக்கு முற்பட்டவர்கள் பெரும்பாலும் ரேடியோவில் பொழுதை கழித்திருக்க வாய்ப்புண்டு, கம்பி வட தொலைக்காட்சிகளுக்கு பின் கிட்டத்தட்ட மறைந்து போன வானொலியை மீண்டும் கொண்டு வந்தது எஃப்.எம்.

http://radio.thiratti.com/




உலக அளவில் தமிழில் நிறைய எஃப்.எம். வானொலிகள் உண்டு, அவைகளை தொகுத்து தந்திருக்கிறார் திரட்டி.காம் வெங்கடேஷ்...


அழகான தள வடிவமைப்பு, நிறைய எஃப்.எம். வானொலிகளை இணைத்து அட்டகாசமாக செய்திருக்கிறார்...


இது செம தூளு ... நீங்களும் கேட்டு பாருங்களேன் திரட்டி ரேடியோ

திங்கள்(மாதம்)களின் சரியான தமிழ் பெயர்கள்

திங்கள்(மாதம்)களின் பெயர்களை சித்திரை, வைகாசி என்று தான் மனனம் செய்திருந்தோம் சிறுவயதிலிருந்தே, ஆனால் அவைகள் எல்லாம் சரியான தமிழ் பெயர்கள் அல்லவாம், மீண்டும் மனப்பாடம் செய்ய வேண்டும்... சரியான தமிழ் திங்கள்களின் பெயர்கள் கீழே



1. சுறவம் (தை)

2. கும்பம் (மாசி)

3. மீனம் (பங்குனி)

4. மேழம் (சித்திரை)

5. விடை (வைகாசி)

6. ஆடவை (ஆனி)

7. கடகம் (ஆடி)

8. மடங்கல் (ஆவணி)

9. கன்னி (புரட்டாசி)

10. துலாம் (ஐப்பசி)

11. நளி (கார்த்திகை)

12. சிலை (மார்கழி)





ராசி என்பதன் தமிழ் சொல் - ஓரை





நன்றி திரு வெ யுவராசன்.

http://thamizhthottam.blogspot.com